மீண்டும் இணைகிறதா மிஷ்கின் – விஷால் கூட்டணி?

துப்பறிவாளன் 2 படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்த மிஷ்கின்-விஷால் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து வெளிவந்த படம் துப்பறிவாளன். இந்த படத்தில் ஒரு நேர்மையான டிடெக்டிவ் அதிகாரியாக விஷால் மற்றும் பிரசன்னா நடித்திருப்பார்கள். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்க துவங்கினர்.

இந்த இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமி நடித்த முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடித்துள்ளது. இதனிடையே விஷாலுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இப்படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். மீதி படத்தை தானே இயக்க உள்ளதாக விஷால் அறிவித்தார்.

இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக மிஷ்கின் ஒரு வெப் தொடர் அறிமுக விழாவில் விஷாலை திட்டித்தீர்த்தார். இதனால் இவர்கள் இடையேயான பிரச்சனை திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இருவரும் மீண்டும் கூட்டணி சேர்வது சாத்தியமில்லாத ஒன்று என்று திரையுலகில் பேசிக் கொண்டனர்.

இதனிடையே துப்பறிவாளன் 2 படத்தில் எஞ்சியுள்ள காட்சிகளை எடுக்க விஷால் தயாராகி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மிஷ்கினை மீண்டும் அழைத்து படத்தை இயக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தகவல் பரவி வருகிறது. மிஷ்கின் இயக்கினால் தான் படம் சிறப்பாக இருக்கும் என விஷால் கருதுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!