சாத்தான்குளம் விவகாரம்…. குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் – சிவகார்த்திகேயன்

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன், சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை, எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தில் நீதியை நிலைநாட்டி மக்களுக்கு நம்பிக்கை அளிக்குமாறு, அரசுக்கு சிவகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!