ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு விஜய் ரசிகர்கள் ரூ.1 லட்சம் நிதியுதவி

சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு விஜய் ரசிகர்கள் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளனர்.

லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்த கடுக்கலூரைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீரமரணம் அடைந்தார். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது. இதேபோல் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.மணிகண்டன் ரூ. 2.25 லட்சம், திமுக சார்பில் ராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்ஷா, முத்துராமலிங்கம் ஆகியோர் ரூ.2 லட்சம் வழங்கினர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளை ரத்து செய்து, ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு உதவுவதாக விஜய் ரசிகர் மன்றத் தலைமை நிர்வாகிகள் அறிவித்தனர். அதன்படி ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரூ.1 லட்சம் நிதிக்கான காசோலையை ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினரிடம் விஜய் மக்கள் இயக்கத்தினர் நேற்று வழங்கினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!