சுஷாந்த் சிங் போல் நானும் பாதிக்கப்பட்டேன் – வித்யா பிரதீப் வேதனை

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் போல் நானும் பாதிக்கப் பட்டேன் என்று நடிகை வித்யா பிரதீப் வேதனையுடன் கூறியிருக்கிறார்.

தமிழில் அவள் பெயர் தமிழரசி என்ற படத்தின் மூலம் நடிகையானவர் வித்யா பிரதீப். அதன் பின் விஜய் இயக்கிய சைவம், பாண்டிராஜின் பசங்க 2, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், மாரி 2, தடம் உட்பட சில படங்களில் நடித்துள்ள இவர், இப்போது ஒத்தைக்கு ஒத்த, அசுரகுலம், தலைவி ஆகிய படங்களில் நடித்துள்ளார். டிவி.சிரியல்களிலும் நடித்து வருகிறார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்குப் பிறகு நடிகர், நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த மன அழுத்தம் பற்றி வெளிப்படையாக பேசத் தொடங்கி இருக்கிறார்கள். சில நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த மன அழுத்தம் பற்றி கூறியிருந்தனர். இந்நிலையில் வித்யா பிரதீப்பும் தமிழ் சினிமாவில் தனக்கு நேர்ந்த அதிர்ச்சி அனுபவம் பற்றி சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அதில் கூறியிருப்பதாவது: ‘தடம்’ படத்தில் நடிப்பதற்கு முன் 6 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். இதனால் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால், திடீரென அந்த படங்களில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள். தொழிலுக்கு சம்பந்தமில்லாத காரணங்களுக்காக நான் நீக்கப்பட்டேன். இதனால் நான் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினேன் என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!