கொரோனா தொற்றால் இந்தி பட தயாரிப்பாளர் மரணம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தி பட தயாரிப்பாளர் அனில் சூரி காலமானார்.

மும்பையில் வசித்து வந்தவர் பழம்பெரும் இந்தி பட தயாரிப்பாளர் அனில் சூரி. இவர் ராஜ்குமார்- ரேகா நடித்த கர்மயோகி, ராஜ் திலக் உள்ளிட்ட பல படங்களை தயாரித்து உள்ளார். 77 வயதான தயாரிப்பாளருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மூச்சு திணறலுடன் காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பை மாகிம் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு படுக்கை இல்லை என அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்தநிலையில் அனில் சூரி மும்பையில் பல்நோக்கு வசதி கொண்ட ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடல்நிலை மோசமடைந்து அனில் சூரி உயிரிழந்தார். நேற்று அவரது உடல் வெர்சோவாவில் உள்ள தகன மையத்தில் தகனம் செய்யப்பட்டது. இதில் தயாரிப்பாளரின் நெருங்கிய உறவினர்கள் 4 பேர் மட்டுமே பாதுகாப்பு உடை அணிந்து கலந்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!