சிம்புவிடம் இருந்தது சூர்யாவுக்கான ஸ்கிரிப்ட் – கவுதம் மேனன் வெளியிட்ட சீக்ரெட்

‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்தில் சிம்பு கையில் வைத்திருந்தது சூர்யா படத்திற்கான ஸ்கிரிப்ட் என கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்து 2010-ல் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது அந்த படத்தின் தொடர்ச்சியாக ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற பெயரில் புதிய குறும்படத்தை ஐபோனில் படமாக்கி கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார். இந்த குறும்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், அந்த குறும்படத்தில் சிம்பு எழுதும் “கமல், காதம்பரி” கதை, சூர்யாவுக்காக தான் எழுதிய ஸ்கிரிப்ட் என இயக்குனர் கவுதம் மேனன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கதையை சூர்யாவுக்கு சொன்னதாகவும், அது அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் கூறிய கவுதம் மேனன், இன்னும் எதுவும் உறுதிப்படுத்தவில்லை என கூறியுள்ளார்.

கதைப்படி வெளிநாட்டில் தான் பெரும்பாலான காட்சிகளை படமாக்க வேண்டியிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போதைக்கு அது சாத்தியமில்லை, அதற்கு நேரம் ஆகும் என கவுதம் மேனன் தெரிவித்தார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா ஏற்கனவே காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது இந்த கூட்டணி 3-வது முறையாக இணைந்து ஹாட்ரிக் வெற்றி கொடுக்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!