கொரோனா வதந்தி பரப்பிய நடிகரை எச்சரித்த பிரதாப் போத்தன்

தமிழில் அழியாத கோலங்கள், மூடுபனி போன்ற படங்களில் நடித்த பிரதாப் போத்தன் கொரோனா வதந்தி பரப்பியவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழில் அழியாத கோலங்கள், மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, பன்னீர் புஷ்பங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பிரதாப் போத்தன். மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். பிரதாப் போத்தனின் குரலில் அவரது சகோதரிக்கு நடிகர் ஒருவர் செல்போனில் பேசி தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதுபோல் பல தடவை இருமி விட்டு போனை துண்டித்துள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதாப் போத்தன் அந்த நடிகர் மீது வழக்கு தொடர்வேன் என்று எச்சரித்துள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பிரதாப் போத்தன் கூறியிருப்பதாவது:-

“இத்தாலியில் வசித்து வந்த எனது சகோதரி கொரோனா பரவுவதற்கு முன்பே இந்தியா திரும்பி தற்போது கேரளாவில் தனியாக வசித்து வருகிறார். நான் சென்னையில் இருக்கிறேன். இந்த நிலையில் சினிமாவில் தோல்வி அடைந்த நடிகர் ஒருவர் எனது சகோதரிக்கு போனில் தொடர்பு கொண்டு எனது குரலில் ‘மிமிக்ரி’ செய்து பிரதாப் பேசுகிறேன் என்று சொல்லி தொடர்ந்து இருமிக்கொண்டே இணைப்பை துண்டித்துள்ளார். எனது சகோதரி பதறிபோய் எனக்கு போன் செய்து விசாரித்தார். அந்த நடிகர் யார் என்பது தெரிந்து விட்டது. அவர் இப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்”

இவ்வாறு பிரதாப் போத்தன் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!