வீட்டிலிருந்து உலகை காக்கும் அற்புத வாய்ப்பு இது – மீனா அறிவுரை

கொரோனா விழிப்பணர்வு வீடியோ வெளியிட்டு உள்ள நடிகை மீனா, மக்கள் வீட்டிலிருந்து உலகை காக்கும் அற்புத வாய்ப்பு இது என தெரிவித்துள்ளார்.

நடிகை மீனா கொரோனா விழிப்பணர்வு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:- கொரோனா வைரஸ் இந்த உலகத்தையே ஆட்டிப்படைக்கிறது. அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பித்து இருக்கிறது. ஆனாலும் நிறைய பேர் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் விளையாட்டாக வெளியே சுற்றுவதை தொலைக்காட்சிகளில் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.

இதுபோன்று, அரசாங்கம் சொன்னதை கேட்காததால்தான் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கானவர்களை இந்த வைரஸ் தாக்குகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் தினம்தினம் செத்து போகிறார்கள். அமெரிக்காவில் 2 லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமை நமக்கு வேண்டுமா? இந்த நிலைமை நமக்கு வராமல் இருப்பதற்கு நாம் அரசு சொல்கிறபடி கேட்க வேண்டும். எவ்வளவு நேரம் வீட்டில் உட்காருவது, எவ்வளவு நேரம் டி.வி பார்ப்பது? என்று சொல்லாதீர்கள். வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களோடு விளையாடுங்கள், குழந்தைகளுக்கு படிப்பு சொல்லி கொடுங்கள்.

வீட்டு வேலை பாருங்கள், சமையல் அறையில் உதவி செய்யுங்கள். யோகா, தியானம் என்று செய்வதற்கு பல விஷயங்கள் இருக்கிறது. வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து உலகையே காப்பாற்றும் அற்புதமான வாய்ப்பு எல்லோருக்கும் அடிக்கடி கிடைக்காது. நீங்கள் ஜாக்கிரதையாக இருந்தால்தான் உங்கள் குடும்பம் ஆரோக்கியமாக இருக்க முடியும். எனவே வீட்டில் இருங்கள்.

இவ்வாறு மீனா கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!