அவர்களை போலீஸ் அடிப்பது தவறல்ல – சுரேஷ் கோபி

ஊரடங்கை மீறி நடப்பவர்களை போலீசார் அடிப்பது தவறு அல்ல என்று பிரபல தமிழ், மலையாள நடிகர் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. இதையும் மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தும், லத்தியால் அடுத்து விரட்டியும், தோப்புக்கரணம் போட வைத்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. போலீசார் அடிப்பதற்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன. இதுகுறித்து தமிழில் தீனா, சமுத்திரம், ஐ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி கருத்து தெரிவித்து கூறியதாவது:- “

ஊரடங்கை மீறி நடப்பவர்களை முக்கியமான உறுப்புகள் பாதிக்காத வகையில் போலீசார் அடிப்பது தவறு அல்ல. சிலரை அடித்துத்தான் திருத்த முடியும். இதற்காக போலீசார் மீது புகார் சொல்ல கூடாது. அவர்களுக்கு கட்டுப்பாடுகளையும் விதிக்க கூடாது. போலீசார் மக்களுக்காக வேலை செய்கிறார்கள். அவர்களின் சேவையை பாராட்ட வேண்டும்.

நிலைமை எல்லை மீறி போனால் ராணுவத்தைதான் அழைக்க வேண்டும். அவர்களுக்கு தமிழன், மலையாளி, வேறு மொழி பேசுபவர்கள் என்று வித்தியாசமெல்லாம் கிடையாது. இதனை ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக்கொள்ளுங்கள். போலீசார் செயலை எல்லோரும் ஆதரிக்க வேண்டும்”. இவ்வாறு சுரேஷ் கோபி கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!