ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ்

தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ், ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.

சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்து பிரபலமான கீர்த்தி சுரேசுக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். மோகன்லாலுடன் அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற சரித்திர கதையம்சம் கொண்ட படமொன்றில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரது தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்கார் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்தே இந்த படம் தயாராகிறது. இதில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார். இதுவரை அவர் ஏற்றிராத கதாபாத்திரமாக இது இருக்கும் என்கின்றனர்.

ரூ.100 கோடி செலவில் தயாராகிறது. பிரியதர்ஷன் இயக்கி வருகிறார். இந்த படத்தை மார்ச் மாதம் 26-ந்தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். உலகம் முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட இருப்பதாக கூறப்படுகிறது. மகாநடி படத்தைபோல் இதுவும் தனக்கு பெயர் வாங்கி கொடுக்கும் என்று கீர்த்தி சுரேஷ் எதிர்பார்க்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!