திரெளபதி படத்திற்கு அஜித் வாழ்த்து தெரிவித்தாரா? – இயக்குனர் மோகன் விளக்கம்

திரெளபதி படத்திற்கு அஜித் வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் பரவி வந்த நிலையில், இதுகுறித்து அப்படத்தின் இயக்குனர் மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

மோகன் இயக்கத்தில் ரிச்சர்டு, ஷீலா ராஜ்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘திரெளபதி’. கடந்த வாரம் வெளியான இந்த படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. இதில் இடம்பெற்ற வசனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே, ஆணவப்படுகொலைகளை நியாயப்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் அமைந்துள்ளதாக கூறி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தரப்பில் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பரபரப்பு அடங்குவதற்குள், ’திரெளபதி’ படத்திற்கு அஜித் வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் பரவின. அதேபோல், இப்படத்தின் இயக்குனர் மோகன், அஜித்துடன் இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன், விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: வதந்திகளை நம்பாதீர். திரெளபதி குறித்து அஜித் எனக்கு எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை. உலவும் புகைப்படம் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ரசிகராக அவருடன் எடுத்தது மட்டுமே’ என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!