பொன்னியின் செல்வனுக்காக தோற்றத்தை மாற்றிய ஜெயம் ரவி

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர் ஜெயம் ரவி உடல் தோற்றத்தை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயம் படம் மூலம் கடந்த 2003-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஜெயம் ரவி. இந்த படத்தை அவரது அண்ணன் ராஜா இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து கமர்ஷியல் ஹீரோவாக உயர்ந்தார். அதுவரை கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த ஜெயம் ரவி, பின்னர் பேராண்மை, ஆதி பகவன் போன்ற படங்களின் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

முன்னணி நடிகர்கள் சிலர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். சமூகத்திற்கு தேவையான கருத்துகளை சில ஹீரோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் தன்னுடைய சமூக பார்வையை தான் நடிக்கும் படங்கள் மூலம் சமுதாயத்தில் இருக்கும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டும் விதமாகவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் திரைப்படங்களின் கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதாக ஜெயம் ரவி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அதன் எதிரொலியாக தனி ஒருவன், பூலோகம், டிக் டிக் டிக் போன்ற சமூக கருத்துக்கள் கொண்ட படங்களை கொடுத்துள்ள ஜெயம் ரவி, தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி அருள்மொழிவர்மன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக சில மாதங்கள் தீவிர உடற்பயிற்சி செய்து தன்னை தயார் படுத்திக்கொண்டார். தற்போது தாய்லாந்தில் இவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் லக்‌ஷ்மண் இயக்கும் பூமி, அகமது இயக்கும் ஜன கன மன போன்ற படங்களிலும் ஜெயம் ரவி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!