வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட்!

வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்த மிஸ்டர் லோக்கல் உள்பட பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் தயாரிப்பாளர்களில் ஞானவேல் ராஜாவும் ஒருவர். இவர், சூர்யா, சிவகார்த்திகேயன், கௌதம் கார்த்திக், கார்த்தி என்று மாஸ் நடிகர்களை வைத்து பல படங்களை தயாரித்துள்ளார். இவர், தயாரிப்பாளர் மட்டுமல்லாமல் படங்களை விநியோகம் செய்யும் விநியோகஸ்தராகவும் இருக்கிறார். அதோடு, நடிகர் சிவக்குமார், சூர்யா குடும்பத்தினரின் உறவினரும் கூட.

இந்த நிலையில், வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்று வருமான வரித்துறை ஞானவேல்ராஜாவுக்கு எதிராக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தொடர்ந்து இது தொடர்பான விசாரணை நடந்து வந்தது. விசாரணைக்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனால், அவருக்கு உடனடியாக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!