விபத்தில் சிக்கிய பிரபல நடிகரின் காரில் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல்

ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கிய பிரபல நடிகரின் காரில் இருந்து போலீசார் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ராஜசேகர். இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் லேசான காயமடைந்த ராஜசேகர், சம்பவ இடத்துக்கு போலீசார் வருவதற்கு முன்னால் வேறொரு காரில் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து விபத்தில் சிக்கிய காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் இரண்டு வெளிநாட்டு வோட்கா பாட்டில்களும் ஒரு டம்ளரும் இருந்ததாக கூறப்படுகிறது. வேகமாக காரை ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஷம்சாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.வெங்கடேஷ் கூறும்போது, “அதிவேகமாக காரை ஓட்டி வந்ததால் கட்டுபாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு உள்ளது. காரின் ஏர்பேக் ராஜசேகர் உயிரை காப்பாற்றி உள்ளது. நாங்கள் வருவதற்கு முன்பே அவர் புறப்பட்டு சென்று விட்டதால் மதுபோதையில் இருந்தாரா? என்பதை ஆய்வு செய்ய முடியவில்லை. காருக்குள் மதுபாட்டில் இருந்தது” என்றார். ஜீவிதா கூறும்போது விபத்தில் ராஜசேகருக்கு காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். தற்போது நலமாக இருக்கிறார்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!