நான் விஜய் சார்,அஜீத் சார் படமா பண்ணியிருக்கேன்? சின்ன படங்களை சாவடிக்கிறாங்க: சிம்பு பட தயாரிப்பாளர் குமுறல்

சிறு பட்ஜெட் படங்களை சாகடிப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ள படம் மிக மிக அவசரம். போதிய திரையரங்குகள் கிடைக்காமல் தொடர்ந்து தள்ளிப் போன இப்படம் ஒரு வழியாக கடந்த வெள்ளிக்கிழமையன்று ரிலீஸானது. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தனது வி.ஹவுஸ் ப்ரொடக்‌ஷன் மூலம் தயாரித்துள்ளார்.

ஸ்ரீ ப்ரியங்கா, ஹரிஷ் குமார், முத்து ராமன், ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் திரையரங்கில் இப்படத்திற்குக் காலை மற்றும் மதியம் காட்சிகள் மட்டுமே கொடுத்துள்ளதால் எதிர்பார்த்த வசூல் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து சுரேஷ் காமாட்சி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘கொடுக்கிற மாதிரி கொடுப்பாங்களே. அப்படித்தான் ஆகிப்போச்சு. திரையரங்குகள் மிக மிக அவசரம் படத்திற்கு கிடைத்தது. காலைல ஷோ, மத்தியான ஷோவா கொடுத்தா யார் சார் தியேட்டருக்கு வருவாங்க? நான் விஜய் சார்,அஜீத் சார் படமா பண்ணியிருக்கேன்? சின்ன படங்களை சாவடிக்கிறாங்க’ என்று தனது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார்.

காவலர்களுக்கும் மனிதாபிமானம், மக்கள் போராட்டம் போன்றவற்றில் அக்கறை உண்டு என்பதை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. அதிலும் ஒரு பெண் காவல் அதிகாரி அனுபவிக்கும் பிரச்சனைகளையும், வலியையும் அற்புதமாக சுரேஷ் காமாட்சி படத்தில் காட்டியுள்ளதாக விமர்சகர்கள் கூறினர்.

மேலும் மிக மிக அவசரம் படத்தை ரசிகர்கள், பிரபலங்கள் மட்டுமில்லாமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, புதுவை முதல்வர் நாராயணசாமி, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் இன்னும் பல முக்கிய தலைவர்கள் என்று பலரும் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!