குழந்தையை தத்தெடுக்க உதவுங்கள்’: ராகவா லாரன்ஸிடம் பிக் பாஸ் காஜல் கோரிக்கை

குழந்தையை தத்தெடுக்க உதவி செய்யுமாறு ராகவா லாரன்ஸிடம் கேட்டுள்ளார் நடிகை காஜல் பசுபதி.

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், கள்வனின் காதலி, கோ, கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் காஜல் பசுபதி.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவரும் நடன இயக்குநர் சாண்டியும், காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து விட்டனர். தற்போது காஜல் அவரது அம்மாவுடன் வசித்து வருகிறார். எப்போதும் ட்விட்டரில் படு ஆக்டிவாக இருக்கும் காஜல் சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு அடிக்கடி குரல் கொடுத்து வருகிறர்.

இந்நிலையில் காஜல் தான் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாகவும், அதற்கு உதவும்படியும் இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸிடம் ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்வீட்டில், ‘உங்கள் தொடர்பு எண் தவற விட்டுவிட்டேன் லாரன்ஸ் மாஸ்டர். நான் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறேன். வாழ்க்கை ஒரு குழந்தையில்லாமல் முழுமையடையவில்லை. குழந்தை தத்தெடுப்பது இந்த காலத்தில் எளிதான காரியமும் அல்ல.

ஒரு குழந்தையைத் தத்தெடுக்க உங்களது உதவி தேவை. அந்தக் குழந்தையின் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடியும். இந்த உதவியை நீங்கள் எனக்கு செய்தால் காலம் முழுவதும் நன்றிக் கடன் பட்டிருப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராவிதமாக தவறி விழுந்த சுஜித் குடும்பத்திடம், லாரன்ஸ் ஒரு குழந்தையைத் தத்தெடுக்குமாறு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!