வடிவேலு இடத்தை பிடித்த யோகி பாபு!

பேய் மாமா படத்தில் வடிவேலு நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் தற்போது யோகி பாபு நடித்து வருகிறார்.

வடிவேலு கோலிவுட்டில் கடைசியாக நடித்த படம் மெர்சல். அதன் பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் தினம்தோறும் அவரின் காமெடி வசனங்கள் எதாவது ஒரு இடத்தில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.

இதற்கிடையில் வடிவேலு, சிம்புதேவன் இயக்கும் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் நடிக்க இருந்தார்.இயக்குநர் ஷங்கரும் லைக்கா புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்க இருந்த இந்தப் படத்தின் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் சில பிரச்னை காரணமாக வடிவேலு படத்தில் நடிக்கவில்லை.

உடனே இந்த விவகாரம் தொடர்பாக, வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் புகார் கொடுக்கப்பட்டு, அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் வடிவேலு ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பேய் மாமா என்ற படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்க பிரச்சனை காரணமாக, வடிவேலு நடிக்க முடியாமல் இருப்பதால், அவருக்கு பதில் யோகி பாபு நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு குமுளி பகுதியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இதில் இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, வையாபுரி, பிக் பாஸ் ரேஷ்மா உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் மரணமடைந்தார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக வடிவேலு, ஷக்தி சிதம்பரம் இயக்கிய இங்லீஷ்காரன், கோவை பிரதர்ஸ் போன்ற படங்களின் காமெடி காட்சிகளில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!