எனது நடிப்பை பலரும் பாராட்ட காரணம் இதுதான்- சாய் பல்லவி

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமான சாய் பல்லவி, தனது நடிப்பை பலரும் பாராட்டுவதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

சாய் பல்லவி நடிப்பில் மே மாதம் என்.ஜி.கே படம் வெளியானது. தற்போது 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சினிமா வாழ்க்கை குறித்து சாய் பல்லவி அளித்த பேட்டி வருமாறு:- ‘‘கேமரா முன்னால் என்னையும் உலகையும் மறந்து விடுவேன். நான் நடிக்கும் கதாபாத்திரம் மட்டுமே ஞாபகத்தில் இருக்கும். நான் சகஜமாகவும் யதார்த்தமாகவும் நடிப்பதாக பலர் பாராட்டுவதற்கு இதுதான் காரணம்.

நடிகையாக எனக்கு முதிர்ச்சி வந்து இருக்கிறது. ஒரு கதையை கொடுத்து குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நீ நடிக்க போகிறாய் என்று சொன்னால் அந்த கதை முழுவதையும் படிப்பேன். அப்போதே கதாபாத்திரமாக மாறி விடுவேன். பின்னர் அதோடு ஒன்றி போய் நடிப்பேன். எனது நடிப்பை யார் பாராட்டினாலும் அதற்கு காரணம் நான் தான் என்று மொத்த பலனையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஒரு படம் எப்படி தயாராக நூற்றுக்கணக்கானோரின் கஷ்டமும் உழைப்பும் இருக்கிறது.

திரையில் மட்டும் என்னைப் போன்ற நடிகைகளையும், நடிகர்களையும் பார்க்கிறார்கள். எங்களுக்கு பின்னால் உழைப்பவர்களுக்கு ஒரு அடையாளம் கிடைக்க வேண்டும். ஆனால் கிடைப்பது இல்லை. எல்லா பெருமையும் எங்களுக்குத்தான் வந்து சேர்கிறது. எனக்கு கிடைக்கும் பெயருக்கு பின்னால் எத்தனை பேர் உழைப்பு இருக்கிறது என்பதை நான் மறக்காமல் அவர்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்வேன்.’’

இவ்வாறு சாய் பல்லவி கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!