சாண்டி, தர்ஷனை சந்தித்து பரிசு கொடுத்த சிம்பு!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்த நிலையில், இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக சாண்டி, தர்ஷனை தனது வீட்டிற்கு அழைத்து அவர்களை சந்தித்து பேசியுள்ளார்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட வந்த நிகழ்ச்சி பிக் பாஸ் தமிழ் சீசன் 3. இந்நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி கடந்த 6 ஆம் தேதி பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இதில், முகென் ராவ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

அவருக்கு பிக் பாஸ் 3 டிராபி மற்றும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இவரைத் தொடர்ந்து சாண்டி 2 ஆம் இடம் பிடித்தார். ஆனால், உண்மையில், தர்ஷன் வெற்றி பெறுவார் என்று போட்டியாளர்களும், பார்வையாளர்களும் எண்ணிக் கொண்டிருந்த நிலையில், அவர் வெளியேற்றப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சி.

எனினும், பிக் பாஸ் டைட்டில் வாங்கவில்லை என்றாலும்கூட, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். அதோடு, கமல் ஹாசனின், ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், அண்மையில் தாய்லாந்தில் இருந்து சென்னை திரும்பிய சிம்பு, சாண்டி மற்றும் தர்ஷனை தனது வீட்டிற்கு அழைத்து அவர்களை சந்தித்து பேசியுள்ளார். மேலும், அவர்களுக்கு பரிசும் கொடுத்துள்ளார். அப்போது பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் மகத்தும் இருந்துள்ளார். இந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் மகத், யாஷிகா ஆகியோர் பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற போது, போட்டியாளர்களிடம் சிம்பு உங்களை எல்லாம் கேட்டதாக சொல்லச் சொன்னதாக தெரிவித்தார். அப்போது, மகத், யாஷிகா நடிப்பில் உருவாகியுள்ள இவன் தான் உத்தமன் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!