27 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்த ரோஜா பட ஜோடி!

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு அரவிந்த்சாமி, மதுபாலா நடிப்பில் வெளியான படம் ரோஜா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் ரோஜா படம் மூலம் தான் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பாளராகத் திரையுலகில் அறிமுகமானார்.

ரோஜா படத்தின் பாடல்கள் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அதிலும் குறிப்பாக புது வெள்ளை மழை பாடல் இன்னும் பலரது பேவரிட் லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்த ஜோடி மீண்டும் 27 வருடங்கள் கழித்து ஒரு புதிய படத்தில் இணையவுள்ளது.

ஆனால் இந்த முறை தமிழ் படத்தில் இல்லாமல் இந்தி படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தியை சமீபத்தில் பங்குபெற்ற பேட்டியில் மதுபாலா உறுதி செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, ‘நான் தற்போது அதிகமான படங்களில் நடித்து வருகிறேன். தமிழில் நான் நடித்துள்ள இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. குறிப்பாக அரவிந்த் சாமியுடன் இந்தியில் ஒரு படம் நடிக்கிறேன். ரோஜா படத்திற்கு பிறகு அவருடன் நடிப்பதில் ரொம்ப ஆவலாக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

90ஸ் கால கட்டத்தில் அதிகம் பேசப்பட்ட அரவிந்த் சாமி- மதுபாலா ஜோடி மீண்டும் இணையவுள்ளது அவர்களது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர அரவிந்த் சாமி மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கவுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!