பிரபல நடிகர் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த போது தனக்கு கன்னட நடிகர் ரவி பிரகாஷ் ஆபாசமான குறுசெய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக நடிகை விஜயலட்சுமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

’ஃபிரண்ட்ஸ்’ படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்ததன் மூலம் பிரபலமானாவர் விஜயலட்சுமி. கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த இவர், தமிழ் படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

பெங்களூரி வசித்து வரும் விஜயலட்சுமி, ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவரது மருத்துவச் செலவுக்கு பணமில்லை என குடும்பத்தார் கூறிய நிலையில், தமிழ் திரையுலகினர் மற்றும் கன்னட சினிமாத்துறையினர் நிதியுதவி வழங்கினர்.

மருத்துவமனையில் இருந்த போது விஜயலட்சுமியை சந்திக்க வந்த பிரபல கன்னட நடிகர் ரவி பிரகாஷ், ரூ. 1 லட்சம் பண உதவி செய்தார். தற்போது இவர் மீது புட்டேனஹள்ளி பகுதி காவல்நிலையத்தில் விஜயலட்சுமி பாலியல் புகார் அளித்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, கடந்த 27ம் தேதி ரவிபிரகாஷ் என்னை சந்திக்க வந்தார். மருத்துவச் செலவுக்காக ரூ. 1 லட்சம் கொடுத்து விட்டு கிளம்பிச் சென்றார். அதை தொடர்ந்து, எனது கைப்பேசிக்கு ஆபாசமான குறுந்தகவல்களை அனுப்பி பாலியல் தொல்லை அளித்து வருகிறார். இதனால் எனது குடும்பத்தாரும் நானும் மன வேதனை அடைந்துள்ளோம். பல முறை செல்போனில் பேசியும் அவர் கேட்பதாக இல்லை என விஜயலட்சுமி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் கன்னட சினிமாவில் புயலை கிளப்பி வருகிறது. இந்த குற்றச்சாட்டு குறித்து பேசிய நடிகர் ரவி பிரகாஷ், மனிதாபிமான அடிப்படையில் விஜயலட்சுமிக்கு உதவினேன். தற்போது என் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். அவருக்கு உதவி செய்தது என் தவறு. விஜயலட்சுமி புகார் தொடர்பாக காவல் நிலையத்தில் விளக்கம் அளித்துவிட்டேன் என ரவி பிரகாஷ் கூறியுள்ளார்.

தற்போது கிடைத்திருக்கும் தகவலின் படி, விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் அவரிடமும் மற்றும் நடிகர் ரவி பிரகாஷிடமும் புட்டேனஹள்ளி பகுதி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்