செல்பி எடுத்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது எதற்காக..? சிவகுமார் விளக்கம்..!!


பிரபல நடிகர் சிவக்குமாருடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை அவர் கோபத்துடன் தட்டி விட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

மதுரையில் உள்ள பெரியார் பேருந்து நிலையம் அருகே தனியார் கருத்தரிப்பு மைய திறப்புவிழாவில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார்.

அவருடன் தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் கலந்து கொண்டார். சிவக்குமார் பிரபல நடிகர் என்பதால் அவரை பார்க்க ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் அங்கு கூடியிருந்தனர்.

அப்போது ரிப்பன் வெட்டி திறந்து வைக்க சிவக்குமார் வந்த போது ஒரு இளைஞர் செல்பி எடுக்க முயன்றார்.

இதையடுத்து கோபமடைந்த சிவக்குமார் இளைஞரின் செல்போனை ஆவேசமாக தட்டி விட்டார். இது சம்மந்தமான வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.


இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு சிவகுமார் அளித்த வாக்குமூலத்தில், செல்பி எடுப்பது நீங்கள், குடும்பம் சார்ந்த பர்சனல் சமாச்சாரம், அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை.

ஒரு பொது இடத்தில் 200, 300 பேர் கலந்து கொள்ளும் நிகழ்வில் காரிலிருந்து இறங்கி மண்டபத்துக்கு செல்லும் முன் பாதுகாப்பு அதிகாரிகளையும் ஓரங்கட்டிவிட்டு, 25 பேர் செல்பி என்ற பெயரில் நடக்கவே விடாமல் செய்வது எப்படி நியாயமாக இருக்கும்.

படம் எடுக்கிறேன் சார் என ஒருவார்த்தை கேட்கமாட்டீர்களா? விஐபி என்பவன் நாம சொன்னபடி கேக்கணும், நில்லுனா நிக்கணும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்? எத்தனை ஆயிரம் பேருடன் திருமண விழாக்களிலும், ஏர்போர்டிலும் செல்போனில் போஸ் கொடுத்திருக்கிறேன் என தெரியுமா?

நான் புத்தன் என்று சொல்லவில்லை, என்னை தலைவனாக ஏற்றுக்கொண்டு என்னை பின்பற்று என்றும் நான் சொல்லவில்லை, ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்க்கையில் ஹீரோ தான், அதேசமயம் அடுத்தவர்களை எந்த அளவுக்கு நாம் துன்புறுத்துகிறோம் என்பதை ஒரு கணம் நினைத்து பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!