பிரபல சின்னத்திரை நடிகை போலீசில் புகார் – காதலன் தீக்குளித்து தற்கொலை..!!


தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தீவிரமடைந்த போது, போலீஸ் சீருடையில் தோன்றி, போலீசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் நிலானி.

நிலானிக்கும், சின்னத்திரை உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக பழக்கம் இருந்தது. திருமணம் செய்து கொள்வது தொடர்பாக அவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்தது.

இந்த நிலையில் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் நிலானி பங்கேற்றிருந்த போது, அங்கு வந்த காந்தி லலித்குமார் நிலானியுடன் தகராறில் ஈடுபட்டார். அவரை அவதூறாகவும் பேசியுள்ளார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பில் இருந்தவர்கள் காந்தி லலித்குமாரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து நடிகை நிலானி, மயிலாப்பூர் போலீஸ் நிலையம் சென்று, காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தகராறு செய்வதாக புகார் அளித்தார். அதன்பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் நடிகை நிலானியிடம் தகராறில் ஈடுபட்ட அவரது காதலன் காந்தி லலித்குமார், நேற்று சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!