நடிகர் ரஜினிகாந்தின் 2.0 நவம்பர் 29ல் வெளியீடு என அறிவிப்பு..!!


நடிகர் ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.0.’ ரூ.450 கோடி வரை செலவிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் வேறு எந்த படமும் இவ்வளவு பெரிய செலவில் வந்தது இல்லை. 2010–ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் பட வேலைகள் தொடங்கப்பட்டன. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர்.

ஒரு வருடத்துக்கு முன்பே முழு படமும் முடிந்து விட்டது. கடந்த வருடம் தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். தொழில் நுட்ப பணிகள் தாமதமானதால் ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைத்தனர். பின்னர் இந்த வருடம் ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் அன்று படம் வெளியாகவில்லை.

அதன்பிறகு டப்பிங், கிராபிக்ஸ், ரீரிக்கார்டிங் போன்ற தொழில் நுட்ப பணிகள் நடந்தன. வெளிநாட்டு ஸ்டூடியோக்களில் கிராபிக்சை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக செய்துள்ளனர். இதன் பாடல்களை துபாயில் ஆடம்பர விழா நடத்தி சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரன் படத்தின் 2வது பாகம் 2.0 இந்த வருடம் நவம்பர் 29ந்தேதி வெளியாகிறது என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!