நடிகர்கள் சங்கத்தில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மோகன்லால் உருவ பொம்பை எரிப்பு..!!


கேரள மாநில மலையாள நடிகர்கள் சங்க அம்மாவின் தலைவராக நடிகரும், எம்.பி.யுமான இன்னசென்ட் இருந்து வந்தார். 17 ஆண்டுகளுக்கும் மேலாக சங்கத்தின் தலைவராக இருந்த இன்னசென்ட் உடல் நலக்குறைவு காரணமாக பதவியிலிருந்து விலகினார்.

இதையடுத்து மலையாள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சங்க தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நடிகை ஒருவர் கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்றதால், நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், மீண்டும் திலீப் சங்க உறுப்பினராக சேர்க்கப்பட்டு உள்ளார்.

திலீப் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நடிகை ரீமா கல்லிங்கல் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்தார். நடிகர் சங்கம் உணர்சியற்றதாக இருப்பதாக கூறினார்.


இதை தொடர்ந்து நான்கு நடிகைகள் சங்கத்தில் இருந்து வெளியேறினர். நடிகைகள் பாவனா, ரீமா கல்லிங்கல், கீது மோகன் தாஸ், ரம்யா நம்பீசன்,ஆகியோர் மலையாள நடிகர் சங்கம் அம்மாவை விட்டு வெளியேறினர்.

அது போல் வியாழக்கிழமை, நடிகைகள் ரேவதி, பத்மப்ரியா மற்றும் பார்வதி ஆகியோர் தங்கள் கடிதங்களை சமர்ப்பித்தனர் அதில் தீலிம் மீண்டும் சேர்க்கப்பட்டது குறித்த முடிவைப் பற்றி ஆலோசிக்க அவசரகால நிர்வாகக் கூட்டம் ஒன்றை கூட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சுவாரியர் தலைமையில் செயல்பட்டு வரும் சினிமா பெண்கள் கூட்டுக்குழு திலீப்பை சங்கத்தில் மீண்டும் சேர்த்ததை கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டது.

இந்த விவகாரத்தில் நடிகர் சங்க தலைவர் மோகன்லாலுக்கு பல்வேறு தர்ப்பில் இருந்து எதிர்ப்புகள் ஏற்பட்டு வருகிறது.

திலீபை நடிகர் சங்கத்தில் சேர்த்த மோகன் லாலுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்துள்ள அனைத்து இந்திய இளைஞர் கூட்டமைப்பும் (AIYF) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மோகன்லால் உருவபொம்பையை எரித்தனர். எர்ணாகுளத்தில் திரைப்பட சம்மேளனம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!