‘தனிமைதான் நான் யாருனு எனக்கு புரியவைக்குது’..! காமெடி நாயகியின் ஓப்பன் டாக்..!!


நகைச்சுவை ராணி ஆச்சி மனோரமாவுக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் காமெடி இளவரசியாக ஜொலித்துக்கொண்டிருப்பவர், கோவை சரளா. தென்னிந்திய மொழிகளில் 800 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டவர். இன்றும் ஓர் இளம் நடிகையைப்போல உற்சாகம் குறையாமல் வலம்வருபவர். அது அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்படுகிறது.

சினிமா ஆர்வம் எப்போது ஏற்பட்டுச்சு?”


“அஞ்சு வயசுலேயே, ‘எப்படியாச்சும் என்னை சினிமாவில் சேர்த்துவிடுங்க’னு வீட்டில் அடம்பிடிப்பேன். எனக்கு நாலு அக்கா, ஓர் அண்ணன். வீட்டின் கடைக்குட்டி நான். அப்பா மிலிட்டரி ஆபீஸர். காலையில் அஞ்சரை மணிக்கு மேலே தூங்கிட்டிருந்தா, அப்பாவின் பெல்டுதான் பேசும். ‘படிக்கிறேன்’னு புத்தகத்தோடு கிச்சனுக்குப் போய் தூங்குவேன். ஒன்பது வயசில் ‘வெள்ளி ரதம்’ படத்தில் நடிச்சேன். பிளஸ் டூ முடிச்சதும் படிப்புக்கு டூ விட்டுட்டேன். கோயம்பத்தூரிலிருந்தே மேடை நாடகங்கள், ‘முந்தானை முடிச்சு’ உள்ளிட்ட சில படங்களில் நடிச்சுட்டிருந்தேன். வாய்ப்புகள் அவ்வளவு சுலபத்தில் வந்துடலை. வெறும் சரளாவா இருந்தால் முடியாதுன்னு, சென்னைக்கு வந்து ஒவ்வொரு சினிமா கம்பெனியா ஏறி இறங்கினேன். ‘சின்னவீடு, ‘ஆத்தோர ஆத்தா’, ‘வைதேகி காத்திருந்தாள்’ எனக் கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சது. 1980 இறுதியில் எக்கச்சக்க படங்களில் நடிக்க ஆரம்பிச்சேன்.”

“தொடர்ந்து காமெடி வாய்ப்புகள் மட்டுமே வருதே எனக் கவலைப்பட்டிருக்கீங்களா?”


“இப்போவரை இந்த ரோல்தான் வேணும்னு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. என்னை நம்பிக் கொடுக்கும் கேரக்டரில் என் பெஸ்டை காண்பிக்கிறேன். அது மக்களுக்கும் ரொம்பப் பிடிக்குது. மக்கள்தானே நடுவர்கள். அதனால், தொடர்ந்து எனக்கு வரும் காமெடி ரோலில் சிறப்பாக நடிச்சுட்டிருக்கேன். ‘சதி லீலாவதி’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘காலம் மாறிப்போச்சு’ உள்ளிட்ட பல படங்களில் ஒன் ஆஃப் தி ஹீரோயினாவும் நடிச்சிருக்கேன். ஒரே மாதிரி டயலாக் பேசாமல், ‘ஏனுங்க மாமோய்’, ‘ஏன்டா ராகவா’னு புதுசு புதுசா வாய்ஸ் மாடுலேஷனோடு டயலாக் பேசுறேன். சமீபமாக, காமெடியுடன் நிறைய சென்டிமென்ட் ரோலிலும் நடிக்கிறது திருப்தியா இருக்கு.”

“முப்பது வருஷத்துக்கும் மேலாக சினிமாவில் அசைக்க முடியாத இடத்தைப் பிடிச்சிருக்கிறதைப் பற்றி..”


“ரொம்ப சந்தோஷமா இருக்கு. சினிமா ஃபீல்டுக்கு வந்து 34 வருஷமாகுது. 90-களின் தொடக்கத்தில் தமிழ் சினிமா வாய்ப்புகள் குறைய ஆரம்பிச்சது. தெலுங்கு இன்டஸ்ட்ரியில் நுழைஞ்சேன். இப்போ நூற்றுக்கும் அதிகமான தெலுங்குப் படங்களில் நடிச்சுட்டேன். நடுவில், ஆங்கராகப் பல மொழி சேனல்களில் வொர்க் பண்ணினேன். இதுக்கிடையே நான் பட்ட கஷ்டங்கள் நிறைய. அதையெல்லாம் இன்முகத்தோடு ஏத்துக்கிட்டேன். இப்போவரை எல்லாத் தரப்பு ரசிகர்களுக்கும் பிடிச்சவளாக இருக்கேன். காமெடி நடிகையா இருந்ததால்தான் இப்படிப் பல வருஷங்களாக நிலைச்சிருக்கேன்.”

“நீங்க ரொம்ப ரிசர்வ்டு டைப்; தனிமைச் சூழலில் வாழறீங்க என்ற விமர்சனங்களுக்கு என்ன சொல்றீங்க?”


“ஆமாம்! தனிமைதான் எனக்குப் பிடிச்சிருக்கு. என்னை நான் யார்னு உணர இத்தனிமை உதவுது. நான் யார்கிட்டயும் அதிகமாகப் பேச மாட்டேன். என்னை மதிச்சு பேசுறவங்க கருத்துக்கு மதிப்பு கொடுத்துக் கேட்பேன். ‘கல்யாணம் செய்துக்கலை; வயசாகியும் ஓடியாடி நடிக்கிறாள்’னு பலவிதமாகச் சொல்றாங்க. அதையெல்லாம் பெருசா எடுத்துக்கறதில்லை. நடிப்பின்மூலம் மக்களை மகிழ்விக்கிறதுதான் என் ஒரே நோக்கம். அதுக்காக நிறைய கஷ்டங்களைச் சந்திச்சிருக்கேன். எப்போ எனக்குக் கண்ணு சரியாகத் தெரியாமல், காது கேட்காமல், நடக்க முடியாத நிலை வருதோ அப்போதான் வயசாயிட்டதா நினைப்பேன். அதுவரை நான் 18 வயசுப் பொண்ணுதான். அந்த உற்சாகத்தோடுதான் இரவு பகல் பார்க்காமல் உழைப்பேன். அதுக்காக, கோடிக்கணக்குல சொத்து சேர்த்துடலை. என் அடிப்படைத் தேவைக்கானதைதான் வெச்சிருக்கேன். ஆடம்பர வாழ்க்கையும் வாழ்ந்துட்டில்லை.


எல்லா ஆர்டிஸ்டுங்க மேலேயும் அன்பு வெச்சிருக்கேன். என்னைப் பிடிக்காதவங்க மீதும் மரியாதை வெச்சிருக்கேன். நிறையக் காயங்களைச் சந்திச்சதால், யாருடனும் நெருங்கிய நட்பா இருக்குறதில்லை அவ்வளவுதான். எனக்குள் இருக்கும் கவலைகளை வீட்டைத் தாண்டி வந்ததும் மறந்துடுவேன். ஷூட்டிங் முடிச்சு வீட்டுக்குள் நுழைஞ்சால், நான் ஒரு சாதாரண மனுஷி. வீட்டு வேலை, புக் படிக்கிறதுனு என் உலகில் இருப்பேன். சொந்தங்களோடு வருஷத்துக்கு ஒருமுறை கோயிலுக்குப் போறதோடு சரி. யாரையும் சாராமல் இருக்கப் பழகிட்டேன். ஷாப்பிங் போறதும் பிடிக்காது. என்னை இளமையாகக் காட்டுறது, படங்களின் டிசைனர்கள்தான்.

“மனோரமா, கோவை சரளாவுக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு காமெடி நடிகைகள் உருவாகலையே..”


“ஆச்சி அம்மாவுக்கும் எனக்கும் தனி காமெடி டிராக் எழுதப்பட்டுச்சு. இப்போ அந்தச் சூழல் அரிதாகவே நடக்குது. இதனால்தான் தனித்துவத்துடன் ஒரு காமெடி நடிகை உருவாகாமல் இருக்காங்க. இந்த நிலை மாறணும்.”

” ‘மெர்சல்’ படத்தில் விஜயின் அம்மாவா நடிச்ச அனுபவம் பற்றி…”

“விஜயும் நானும் பல படங்களில் ஒண்ணா நடிச்சிருக்கோம். ‘மெர்சல’ படத்தில் நடிச்சப்போ, ‘நாம நடிச்சும் சந்திச்சும் பல வருஷமாச்சு. இனி அடிக்கடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அமையணும்’னு சொன்னார். ‘அப்படி நடந்தா சந்தோஷம்’னு சொன்னேன்.”


“தற்போது நடிச்சுகிட்டிருக்கும் படங்கள்?”

“இப்போ ‘காஞ்சனா 3’ ஷூட்டிங் பரபரப்பா போயிட்டிருக்கு. ஒரு மாசத்துக்கும் மேலாக டே நைட்டா நடிச்சுட்டிருக்கேன். தவிர, இன்னும் மூணு படங்கள் கைவசம் இருக்கு. வாழ்க்கை துடிப்போடு போயிட்டிருக்கு” எனப் புன்னகைக்கிறார் கோவை சரளா.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி