ஆஸ்கார் விருதுக்கு பின் நடிப்பதில் இருந்து விலக ஜூனியர் என்.டி.ஆர். முடிவா…? ரசிகர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆண்டு ஆஸ்கார் விருது வழங்கும் விழா கடந்த 13-ந்தேதி சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறந்த அசல் பாடல் பிரிவுக்கான விருது, ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற நாட்டு… நாட்டு… பாடலுக்கு கிடைத்தது. இந்த படத்தில், நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் நடிகர் ராம்சரண் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்து உள்ளனர். விருது வழங்கும் விழாவில் பங்கு கொண்டு விட்டு, ஆர்.ஆர்.ஆர். பட குழுவினர் சமீபத்தில் நாடு திரும்பினர். இயக்குனர் ராஜமவுலி, அவரது மனைவி ரமா, இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் அவரது குடும்பத்தினர் ஐதராபாத்துக்கு திரும்பினர்.

இதேபோன்று நாடு திரும்பிய ஜூனியர் என்.டி.ஆர். சமீபத்தில் நடிகர் விஷ்வக் சென்னின், தாஸ் கா தாம்கி என்ற படத்தின் ரிலீசுக்கு முன்னான நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் அப்போது ரசிகர்களிடமும் உரையாடினார். அவரிடம் ரசிகர்கள் சிலர் ஆர்வமுடன், அடுத்து என்ன படத்தில் நடித்து வருகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் அளித்த பதில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் ரசிகர்களை நோக்கி, எந்த படத்திலும் நான் இனி நடிக்கமாட்டேன். நீங்கள் தொடர்ந்து இதுபோன்ற கேள்விகளை கேட்டால், படத்தில் நடிப்பதில் இருந்து விலக போகிறேன்.

நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை என கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். இதனால், ரசிகர்கள் சற்று அமைதியில் ஆழ்ந்தனர். அப்போது அவரே ரசிகர்களை நோக்கி, படங்களில் நடிப்பதில் இருந்து விலகும் எந்த திட்டமும் இல்லை. விரைவில் அடுத்த படத்தில் நடிப்பேன் என உறுதி கூறினார். நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். அடுத்து, நடிகை ஜான்வி கபூருடன் சேர்ந்து கொரட்டலா சிவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம், 2024-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி வெளிவர திட்டமிடப்பட்டு உள்ளது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!