போண்டாமணி அனாதையாக போகக் கூடாது.. நடிகர் பெஞ்சமின் உருக்கம்..

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இடம்பெற்ற இவரின் காமெடி காட்சி இன்றளவும் ரசிகர்கள் விரும்பும் காட்சிகளில் ஒன்றாகவுள்ளது.

இதையடுத்து நடிகர் போண்டாமணி இதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக சக நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், “அண்ணன் போண்டாமணி அவர்களுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது. அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். தயவு செய்து இந்த காணொலியைப் பார்க்கும் நண்பர்கள் அவரது மேல் சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கையிலிருந்து வந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்து பல்வேறு தடைகளைத் தாண்டி சினிமாவில் நுழைந்தவர். தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அவரை காப்பாற்ற வேண்டும். உங்களால் முடிந்தால் அரசியல் தலைவர்களிடமோ, நண்பர்களிடமோ சொல்லி அண்ணன் போண்டா மணியை காப்பாற்றுங்கள். இலங்கையிலிருந்து அனாதையாக வந்தவர். அனாதையாகவே போகக் கூடாது” என்று கூறினார். மேலும், நடிகர் போண்டாமணி கூறுகையில், ” வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு இந்த மருத்துவமனை பெரிய உதவியாக இருக்கிறது. மூச்சுத்திணறல் வந்ததில் படப்பிடிப்பு தளத்தில் அடிபட்டு என்னை இங்கு கொண்டு வந்தார்கள். தனியாருக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தார்கள் நான் தான் ஓமந்தூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறினேன். நல்ல சிகிச்சை அளிக்கிறார்கள்” என்று கூறினார்.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!