கணம் – விமர்சனம்

ஷர்வானந்த், சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் ஆகிய மூவரும் குழந்தை பருவத்தில் இருந்து நண்பர்கள். அந்த பருவத்தில் அவர்கள் நழுவவிட்ட வாய்ப்புகளை நினைத்து வருந்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் விஞ்ஞானியான நாசர் டைம் மிஷின் கொடுக்கிறார். அதன் துணை கொண்டு கடந்த காலத்திற்கு சென்று எல்லாவற்றையும் சரி செய்து வாருங்கள் என்கிறார்.   அதை கேட்ட ஷர்வானந்த், சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் அவர்களின் வாழ்க்கையில் பெரிதாக இழந்த விஷயங்களை மாற்றிமைக்க காலம் கடந்து பயணிக்கிறார்கள். அந்த பயணம் வெற்றிகரமாக அமைந்ததா? எந்த காரணத்திற்காக அவர்கள் பயணிக்கிறார்கள்? என்பதே மீதிக்கதை.  

ஷர்வானந்த் எங்கேயும் எப்போதும் படத்திற்குப் பிறகு கணம் படம் மூலம் மீண்டும் தமிழில் நடித்திருக்கிறார். அம்மாவின் பாசத்திற்காக ஏங்கும் மகனாக நடித்து கவர்ந்திருக்கிறார். அம்மாவை மீண்டும் பார்க்கும் தருணங்களில் நிதானமாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.   சதீஷ் கல்யாணத்திற்கு பெண் கிடைக்காமல் விரக்தி அடையும் போது, நம் வீட்டிலோ அல்லது அக்கம் பக்கத்தினர் வீட்டில் இருக்கும் மனிதர்களை நினைவூட்டுகிறார். ரமேஷ் திலக் சிறு வயதில் படிக்காமல் விட்டதால் தான் இன்று வீடு புரோக்கராக இருக்கிறோம் என்று வருந்தி அதை சரி செய்ய அவர் எடுக்கும் முயற்சியில் பொறுப்புடன் நடித்திருக்கிறார்.   30 வருடங்களுக்கு பிறகு அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மென்மையான அம்மாவாக ஆழமான பாசத்தை வெளிப்படுத்தி அசர வைக்கிறார். தன் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ரிது வர்மா.   இயக்குனர் ஸ்ரீ கார்த்தி இப்படத்தை கவனமாக கையாண்டிருக்கிறார். அறிவியல் புனைகதை மற்றும் அம்மா சென்டிமென்ட் என இரண்டையும் அழகாக இணைத்திருக்கிறார். திரைக்கதையை எழுதிய விதமும் அதை அழகாக காட்சிப்படுத்திய விதமும் சிறப்பு. வாழ்வில் இரண்டாம் வாய்ப்பு வருவது அரிது. ஆகையால், கிடைத்த வாய்ப்பை அந்த கணத்திலேயே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர். ஜக்ஸ் பிஜாய் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சுஜித் சாரங் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

மொத்தத்தில் ‘கணம்’ பலம்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!