விருமன் – விமர்சனம்

ஊர் தாசில்தாராக பிரகாஷ் ராஜ் இருக்கிறார். இவருக்கு நான்கு மகன்கள். இதில் கடைசி மகன் கார்த்தி. இவரின் தாய் சரண்யா பொன்வண்ணன் இறப்புக்கு பிரகாஷ் ராஜ் காரணமாக இருப்பதால் இவரை கொலை செய்ய வேண்டும் என்று கோபத்துடன் இருக்கிறார் கார்த்தி.

ஆனால் பிரகாஷ் ராஜ், கார்த்தியை ஏமாற்றி சரண்யா பொன்வண்ணன் பெயரில் இருக்கும் சொத்தை அபகரிக்க நினைக்கிறார். இறுதியில் கார்த்தி, பிரகாஷ் ராஜை கொலை செய்தாரா? குடும்பத்தோடு இணைந்தாரா? கார்த்தியை பிரகாஷ் ராஜ் ஏமாற்றி சொத்தை அபகரித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கார்த்தி, ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நடனம், நக்கல், ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். தந்தை பிரகாஷ் ராஜ் மற்றும் வில்லன் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருடன் மோதும் காட்சியில் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அதிதி சங்கர் அழகு, சிரிப்பு, நடனம், ரொமான்ஸ் காட்சிகளில் அசத்தி இருக்கிறார். குறிப்பாக குத்தாட்டம் போட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். முதல் படம் என்று தெரியாத அளவுக்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தாசில்தார் கதாபாத்திரத்தில் கம்பீரமாக நடித்திருக்கிறார் பிரகாஷ் ராஜ். தான் சொல்வதை யார் கேட்கவில்லை என்றாலும் அவர்களை எதிர்க்கும் கதாபாத்திரம் பார்ப்பவர்களை கோபப்படுத்துகிறது. பாசத்தால் ரசிகர்களை கட்டி போட்டு இருக்கிறார் ராஜ் கிரண். பல இடங்களில் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார் சூரி. பல இடங்களில் இவரது காமெடி கைகொடுத்து இருக்கிறது.

அப்பா மகன் சண்டை, அண்ணன் தம்பி பாசம் என படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் முத்தையா. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ரசிகர்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொடுத்து இருக்கிறார். வசனங்கள் அனைத்தும் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். குறிப்பாக மதுரை பாடல் தாளம் போட வைக்கிறது. செல்வகுமாரின் ஒளிப்பதிவு மதுரை மணம் மாறாமல் படம் பிடித்து இருக்கிறது.

மொத்தத்தில் ‘ விருமன் ‘ வீரமானவன். 




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!