எண்ணித் துணிக – விமர்சனம்

ஒரு நகைக்கடையில் 2000 கோடி வைரத்தை கொள்ளையடிக்க வம்சி கிருஷ்ணாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. நான்கு பேரின் உதவியுடன் நகைக்கடையை கொள்ளையடிக்க திட்டமிடப்படுகிறது. கொள்ளையடிக்கும் பணத்தை பங்கு போட்டு கொண்டு அந்த பல கோடி வைரத்தை வில்லனிடம் ஒப்படைப்பதே இதன் திட்டம்.

இதனிடையில் தன்னுடைய திருமணத்திற்காக நகைகளை வாங்குவதற்கு அந்த நகைக்கடைக்கு கதாநாயகி செல்கிறார். அச்சமயம் கொள்ளையர்கள் உள்ளே புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபடுகின்றனர். அப்பொழுது கதாநாயகியை கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுகின்றனர். கதாநாயகியை கொலை செய்தவர்களை காவல் துறையின் உதவியுடன் ஜெய் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அவரை கொலை செய்தவர்கள் யார்? இவர்களை ஜெய் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

நகைக்கடையில் நடக்கும் கொள்ளையால் பாதிக்கப்படும் சாமானியன் வாழ்க்கை எப்படி பாதிக்கிறது என்பதை சுவாரசியம் குறையாமல் இயக்குனர் வெற்றிச்செல்வன் கூறியிருக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதை மூலம் படத்தின் சுவாரசியத்தை கூட்டி படத்தை ரசிக்க வைத்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை காதல் காட்சிகளுக்கும் கொடுத்திருக்கலாம். ஜெய், அதுல்யா இருவருக்குமான காதல் காட்சிகள் ஆழமானதாக இல்லை.

இதுவரை திரைப்படங்களில் காதல், காமெடி என வலம் வந்த ஜெய் எண்ணித்துணிக படத்தில் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். இவரின் புதிய முயற்சி பாராட்டப்படுகிறது. இவரின் எதார்த்த நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. கொடுத்த கதாப்பாத்திரத்தை அதுல்யா சரியாக செய்து முடித்துள்ளார். இயல்பான நடிப்பின் மூலம் கதாப்பாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

வில்லனாக நடித்திருக்கும் வம்சி மற்றும் சுரேஷ் சுப்ரமணியன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். வம்சியின் வில்லதனம் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. படங்களில் அவ்வப்போது தோன்றும் கலகலப்பு ரசிக்கும்படி இடம்பெற்றிருக்கிறது.

ஆக்‌ஷன் காட்சிகளில் ஒளிப்பதிவை கச்சிதமாக கையாண்டிருக்கிறார் தினேஷ் குமார். பாடல்களின் வழியாக பலம் சேர்த்திருக்கிறார் சாம் சி எஸ்.

மொத்ததில் எண்ணித்துணிக துணிந்தவன்.





  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!