யானை திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவின் மாஸ் கமெர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரான ஹரி இயக்கத்தில், மாஸ் ஹீரோ அருண் விஜய்யின் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் ‘யானை’. பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார், ராஜேஷ், அம்மு அபிராமி, போஸ் வெங்கட் என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். முதல் முறையாக ஹரி – அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள ‘யானை’ திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மாபெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள். அத்தகைய எதிர்பார்ப்பை, இப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க பார்க்கலாம்..

கதைக்களம்
ஊருக்குள் கௌரமாக வாழ்ந்து வரும் பிஆர்வி குடும்பத்தின் இளைய மகனாக வரும் ரவி { அருண் விஜய் }, குடும்பத்தின் மீதும், தனது அண்ணன்கள் சமுத்திரனி, வெங்கட் போஸ், சஞ்சீவ் மூவரின் மீதும் அளவுகடந்த பாசத்தை வைத்துள்ளார். என்னதான், அருண் விஜய் தனது அண்ணன்களை உடன்பிறந்தவர்கள் என்று பார்த்தாலும், அவர்கள் மூவரும் அருண் விஜய்யை இரண்டாம் தாய் வயிற்றில் பிறந்தவன் தான் என்று நினைக்கிறார்கள்.

இப்படி ஒரு புறம் கதை நகர, மற்றொரு புறம், பிஆர்வி குடும்பத்தின் மீது இருக்கும் பாகையை தீர்த்துக்கொள்ள, ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார், வில்லன் லிங்கம் { ராமச்சந்திர ராஜு }. பகையை சுமுகமாக முடிக்க நினைக்கும் அருண் விஜய், அதற்கான பல முயற்சிகளை எடுக்கிறார். ஆனால், அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிகிறது. இந்த சமயத்தில், பிஆர்வி குடும்பத்தை ஒட்டுமொத்தமாக உருக்குலையும் விதத்தில் சம்பவம் ஒன்று நடக்கிறது.

இதில் சிக்கிக்கொள்ளும் அருண் விஜய், தனது அண்ணன்களின் கண்களுக்கு விரோதியாக தெரிய, உடனடியாக வீட்டை விட்டு அண்ணன் சமுத்திரக்கனியால் வெளியேற்றப்படுகிறார் அருண் விஜய். இதன்பின், மீண்டும் குடும்பம் ஒன்று சேர்ந்ததா? பகையுடன் திரிந்துகொண்டிருந்த லிங்கம், பிஆர்வி குடும்பத்தை என்ன செய்தார்? அருண் விஜய் இதெல்லாம் எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதி கதை..


படத்தை பற்றிய அலசல்
கையில் மாலையும் படத்தில் என்ட்ரி கொடுத்து, நடிப்பில் மாஸ் காட்டியுள்ளார் அருண் விஜய். ஆக்ஷன், காதல், செண்டிமெண்ட், பாசம் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிரட்டுகிறார். கதாநாயகியாக வரும் பிரியா பவானி ஷங்கர், கதைக்களத்துடன் சேர்ந்து பயணித்து அழகாக நடித்துள்ளார்.

நடிகை ராதிகா தனது அனுபவ நடிப்பை எதார்த்ததுடன் சேர்த்து காட்டியுள்ளார். அண்ணனாக வரும் சமுத்திரக்கனி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். அதற்கு தனி பாராட்டு. வில்லனாக வந்து, கடைசியில் அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார் நடிகர் ராமச்சந்திர ராஜு.


நடிகை அம்மு அபிராமியின் நடிப்பு படத்திற்கு பலம். யோகி பாபு நகைச்சுவைக்காக மட்டுமல்லாமல், படத்துடன் ஒன்றிப்போகிறார். மற்றபடி, அப்பாவாக வந்த நடிகர் ராஜேஷ், அண்ணன்களாக வந்த போஸ் வெங்கட், சஞ்சீவ், ஐஸ்வர்யா, இமான் அண்ணாச்சி என அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.

இயக்குனர் ஹரியின் இயக்கம் சூப்பர். ஆனால், திரைக்கதை சில இடங்களில் சலிப்பு தட்டுகிறது. நன்றாக நகரும் திரைக்கதையில் தேவையில்லாத சில நகைச்சுவை காட்சிகளும், பாடல்களும் படத்தின் ஓட்டத்தை தடுத்து நிறுத்துகிறது. அதை தவிர்த்து இருந்தால், படம் இன்னும் கைதட்டல்களை அள்ளியிருக்கும்.

ஜி.வி. பிரகாஷின் பாடல்கள் பெரிதளவில் ஒர்கவுட் ஆகவில்லை. ஆனால், பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்கிறது. முக்கியமாக சண்டை காட்சிகளுக்கு அமைத்திருக்கும் பின்னணி இசை சூப்பர். எஸ். கோபிநாத்தின் ஒளிப்பதிவு மிரட்டுகிறது. ஆண்டனியின் எடிட்டிங் பக்கா. அனல் அரசின் ஸ்டண்ட் மாஸ்.

க்ளாப்ஸ்
அருண் விஜய், ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி, அம்மு அபிராமி நடிப்பு
அனல் அரசு ஸ்டண்ட்
ஹரியின் இயக்கம்

பல்ப்ஸ்
திரைக்கதையில் சில இடங்களில் சலிப்பு தட்டுகிறது
தேவையில்லாத சில நகைச்சுவை காட்சிகள், பாடல்கள்
மொத்தத்தில், கமெர்ஷியல் ரசிகர்களுக்கு மாஸ் விருந்தாக அமைத்துள்ளது ‘யானை’ 
2.75 / 5
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!