கருணாநிதி பிறந்தநாளன்று “விக்ரம்” படம் வெளியிடுவது திட்டமிட்டதா? – கமல்ஹாசன் பதில்

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள விக்ரம் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்து கமல் பேசியுள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக 2018-ல் விஸ்வரூபம் 2 படம் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ படம் அடுத்த மாதம் 3ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

‘விக்ரம்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கமலஹாசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன் கூறுகையில், “4 வருடங்களாக என் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. 4 வருடங்கள் காத்திருக்க வைத்ததற்காக எனது அன்பான ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ‘விக்ரம்’ படத்தின் அடுத்த பாகம் குறித்து லோகேஷ் கனகராஜ் தான் சொல்ல வேண்டும்; அதற்கும் இவர்தான் இயக்குனர் என நான் முடிவு செய்துவிட்டேன்” என தெரிவித்தார். 


அதன் பிறகு செய்தியாளர் ஒருவர் கமல்ஹாசனிடம் “மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளன்று விக்ரம் படம் வெளியிடுவது திட்டமிட்டதா” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் “சினிமாகாரனாக கலைஞரைப் பற்றிப் பேச ஆயிரம் உள்ளது. இது யதார்த்தமாக எடுக்கப்பட்ட முடிவு” என தெரிவித்தார். 

இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!