பிரபல நடிகை தூக்கு போட்டு தற்கொலை

பிரபல நடிகை வீட்டில் தூக்கு போட்ட நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் அவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இளம் நடிகை பல்லவி டே (வயது 25). கொல்கத்தா நகரின் கர்பா பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று காலை காணப்பட்டார். அவரை பங்கூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.


பல அடுக்குகளை கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் 2வது தளத்தில் வசித்து வந்த அவர் படுக்கை விரிப்பு ஒன்றின் உதவியால் மின் விசிறியில் தூக்கு போட்ட நிலையில் காணப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் கூறும்போது, சம்பவம் நடந்த பகுதியில் இருந்து தற்கொலை செய்ததற்கான குறிப்பு எதுவும் கிடைக்கப் பெறவில்லை. அவரது உடலின் வெளியே காயம் ஏற்பட்டதற்கான அடையாளம் எதுவும் இல்லை என தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து, இயற்கைக்கு முரணான மரணம் என்று வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அவர், மன் மானே நா என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய வேடமேற்று நடித்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார். அவர் தற்கொலை செய்துள்ளார் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஆனால், பல்லவி கொல்லப்பட்டு இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர். பல்லவியுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வரும் சாக்னிக் சக்ரவர்த்தி என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ரேஷம் ஜான்பி என்ற தொடரிலும், அமி சிராஜிர் பேகம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் அவர் நடித்து வந்துள்ளார். இதனால், ரசிகர்கள் வட்டத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அவர் உயிரிழந்தது ரசிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள், திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!