பொன் மாணிக்கவேல் – விமர்சனம்

நடிகர் பிரபுதேவா
நடிகை நிவேதா பெத்துராஜ்
இயக்குனர் முகில் செல்லப்பன்
இசை டி,இமான்
ஓளிப்பதிவு கே.ஜி.வெங்கடேஷ்

சென்னையில் தொடர் படுகொலைகள் அதிகமாகி வருகிறது. நீதிபதி, மருத்துவர் என்று பிரபலமான நபர்கள் இதில் கொல்லப்படுகிறார்கள். சரியான சாட்சியம் கிடைக்காமல் காவல்துறை திணறுகிறது. இதனால் காவல்துறையிலிருந்து தண்டிக்கப்பட்ட நேர்மையான அதிகாரியான பிரபுதேவாவை மீண்டும் பணியில் சேர அழைக்கிறார்கள்.

வேண்டா வெறுப்பாக பணியில் சேரும் பிரபுதேவா ஒரு கட்டத்தில் கொலைக்கான காரணத்தையும் அதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதையும் கண்டுபிடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த கும்பலோடு நெருக்கமாகி மேலும் சிலரைக் கண்டுபிடிக்கிறார்.

ஆனால் அதற்கு மேலும் ஒரு வில்லன் இருக்கிறார். அவர் யார் என்பது தெரிந்து திகைத்து நிற்கிறார் பிரபுதேவா. இறுதியில் அவரை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை படத்தின் மீதிக்கதை.
பிரபுதேவா மிடுக்காக வருகிறார். காவல்துறை மீது இருக்கும் வெறுப்பைக் காட்டுவதும், மனைவி நிவேதா பெத்துராஜ் மீது அன்பைப் பொழிவதுமாக இருக்கிறார். வில்லன் கும்பலோடு அமைதியாக மோதும் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது.

நிவேதா பெத்துராஜ் மனைவியாக வந்து முத்தங்களை நினைவாக வைத்துத் தேர்வு எழுதுகிறார். டூயட் பாடுகிறார். பிரபுதேவாவுக்காக வில்லன்களிடம் சண்டை போடுகிறார். மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை.

ஒரு நேர்மையான அதிகாரியான பிரபுதேவாவிற்குக் காவல் துறையில் நடக்கும் இக்கட்டான சூழலை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் முகில் செல்லப்பன். இந்த மாதிரி கதைகள் 90களில் அதிகம் வந்திருப்பதால் பெரியதாக இப்படம் கவரவில்லை. புதிய கற்பனையும் காட்சிகளும் இல்லாததால் மெதுவாக திரைக்கதை நகர்கிறது. நகைச்சுவைக்காக வரும் கான்ஸ்டபிள், ஏன் வருகிறார் என்றே தெரியவில்லை. சஸ்பென்ஸ் என்று நினைத்து கதையை மறைப்பதில் எந்தவித சுவாரஸ்யமும் வரவில்லை.

டி,இமானின் இசையில் பின்னணி இசை படம் முடிந்த பிறகும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவு நிறைவு.
மொத்தத்தில் ‘பொன் மாணிக்கவேல்’ கம்பீரம் குறைவு.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!