ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பாராட்டு விழா நடத்திய சிரஞ்சீவி

சிரஞ்சீவி நடத்திய பாராட்டு விழாவில் நடிகைகள் ராதிகா சரத்குமார், சுகாசினி மணிரத்னம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் அடுத்தடுத்து இரு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை பெறும் முதல் இந்திய பெண் வீராங்கனை என்கிற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிரஞ்சீவி, பி.வி.சிந்துவுக்கு விருந்துடன் கூடிய ஒரு பாராட்டு விழாவை நடத்தி உள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, சிரஞ்சீவி தனது நண்பர்கள் வட்டாரத்திலிருந்து பலரையும் அழைத்திருந்தார்.

குறிப்பாக தமிழ் நடிகைகள் ராதிகா சரத்குமார், சுகாசினி மணிரத்னம் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பி.வி.சிந்துவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், ஒலிம்பிக்கில் அவர் வாங்கிய வெண்கலப் பதக்கத்தை கையில் வைத்துக்கொண்டு சிந்துவுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!