கொரோனாவால் உயிரிழந்த மனைவி குறித்து அருண்ராஜா காமராஜின் உருக்கமான பதிவு

என்னை தேற்றிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் வாழ்நாள் நன்றிகளை உரித்தாக்குகிறேன் என அருண்ராஜா காமராஜ் பதிவிட்டுள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்த மனைவி குறித்து அருண்ராஜா காமராஜின் உருக்கமான பதிவு
அருண்ராஜா காமராஜ், சிந்துஜா
இயக்குனர், பாடலாசிரியர், நடிகர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். அவரின் மனைவி சிந்துஜா கடந்த வாரம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில் மறைந்த தனது மனைவி குறித்து அருண்ராஜா காமராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “என் விழிகளின் வழியே அவளின் சுவாசம் நசுக்கி எறிப்பட்டதைக் கண்ட நொடி முதல், நமைச் சுற்றி பரவிக்கிடக்கும் அப்பேராபத்தின் தீவிரம் எனையும் இறுக்கி சுழற்றி இழுத்துக்கொள்ள துடித்தது.

எத்தனை உள்ளங்கள் உதவிகள் அன்புள்ள ஆறுதல்கள், பிரார்த்தனைகள், அலைச்சல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மீட்டு விட போராடியும் நச்சு அவள் நாசியினுள் புகுந்து சுவாசத்தை உருக்குலைத்து இயக்கத்தை முடக்கி, இன்று இன்னும் எத்தனை எத்தனை உயிர்கள் கிடைக்கும் என்று அவளையும் என்னை விட்டுப் பிரித்துவிட்டு சென்றது.

நச்சு பாசமறியாது, ஏழ்மையறியாது, அத்யாவசிய அநாவசியங்கள் அறியாது. இவையெலாம் நமக்கான வாழ்க்கைக்கான அளவீடுகளே அன்றி நச்சுகிருமியின் முன் நாம் அனைவரும் சமமே. சக மனிதர்களோடு, மனிதத்தோடு வெறுப்பு, வன்மம், காழ்ப்பு இதை வளர்த்துக் கொள்ள மட்டுமே கற்றுக் கொடுக்கப்பட்டு அதையே ஓர் வாழ்வியலாக்கி வழிந்து ஓடிக் கொண்டிருக்கிறோமோ என்ற சுயபரிசோதனைகளை மேற்கொண்டோமென்றால் இந்த நச்சு நம் பொது எதிரியாகி இந்த போர்க்களம் தன் தீர்வை நோக்கி நகரலாம்.

இங்கே அசட்டு தைரியங்களும், அர்த்தமற்ற பயங்களுமே உயிர்வேட்டை ஆடிக்கொண்டு இருக்கிறது. என்னை தேற்றிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என்னையும் என் துணைவியாரையும் மீட்டு எடுக்கப் போராடிய அத்துனை முன்கள போர்வீரர்களும் என் வாழ்நாள் நன்றிகளை உரித்தாக்குகிறேன். நன்றிகள்.

எனை சுற்றி ஒருவர் கூட நச்சின் கோரத்தில் நசுக்கப்படவில்லை என்பதே இழந்த ஒவ்வோர் இழப்புகளின் ஆன்மா சாந்தியடைவதற்கான வழி. மீண்டும் பல கோடி வாழ்நாள் நன்றிகள். இவ்வாறு அருண்ராஜா காமராஜ் பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!