முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து

சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, ஆட்சியமைக்கும் பணிகளை திமுக தொடங்கியது. சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார்.

தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலினை பதவி ஏற்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் அமைச்சர்கள் அனைவரும் பதவி ஏற்றனர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

‘முடித்தே தீர வேண்டிய’ பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ‘மக்களின் முதல்வராக’ பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

சுவாசிப்பதற்கு ‘உயிர் காற்று’கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில், நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடையும் என்று நம்புகிறோம்.

தங்களுக்கும், ஆற்றலும் அனுபவமும் நிறைந்த தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

தமிழகத்தில் உரிமையை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!