கமர்ஷியல் படங்களில் அதிகம் ஆர்வம் காட்டுவது ஏன்? – நடிகை தமன்னா விளக்கம்

கமர்ஷியல் படங்களில் அதிகம் நடிப்பது ஏன் என்பது குறித்து நடிகை தமன்னா சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.

நடிகை தமன்னாவிடம் அதிகமாக கமர்ஷியல் படங்களில்தான் நடித்து இருக்கிறீர்கள், நடிப்பு திறமையை வெளிப்படுத்துகிற மாதிரியான படங்களில் நடிக்கவில்லை, அதற்காக நீங்கள் வருத்தப்படுவது உண்டா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து தமன்னா கூறியதாவது: “இந்த கருத்தை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். கமர்ஷியல் படங்களில் கதாநாயகிகளின் பங்கு என்பது குறைவாகத்தான் இருக்கும். அதிலேயே ரசிகர்களை கட்டிப்போட வேண்டும். இது ரொம்ப கஷ்டமான விவகாரம்.

பத்து காட்சிகள் இருக்கும்போது நான்கு காட்சிகளிலாவது நமது திறமையை காட்டலாம். அந்த காட்சிகளில் நம்மை நாமே நிரூபிப்பது என்பது பெரிய சவால். ஆனால் எனக்கு கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் நான் நன்றாகவே பயன்படுத்தினேன். தமன்னா கவர்ச்சியாக இருந்தார். நடனம் நன்றாக ஆடினார். உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்தி இருந்தார் என்று எல்லோரும் நினைக்க வேண்டும்.

பெயர், புகழ் வர வேண்டும் என்று அதிகம் உழைத்தேன். அதனால்தான் எனக்கு பெயரும், புகழும் கிடைத்தன. இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையிலும் நீடித்து இருக்க முடிந்தது. இருக்கிற வாய்ப்புகள் என்ன மாதிரி என்பது அவசியம் இல்லை. அதில் நம்மை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம்.” இவ்வாறு தமன்னா கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!