பாடகர் எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகட்டிவ் – எஸ்.பி.பி. சரண்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து தினசரி அப்டேட்டுகளை அவரது மகன் சரண் கொடுத்து வந்தார்.

ஆனால் கடந்த சில தினங்களாக எஸ்.பி.பி உடல்நிலை குறித்து சரண் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் இருந்தார். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் எஸ்.பி.பி உடல்நலம் குறித்து அப்டேட் கேட்டு வந்தனர்.

இந்நிலையில், சரண் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து கூறியுள்ளதாவது: எனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார். தற்போது அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. தொடர்ந்து என் தந்தைக்காக நீங்கள் செய்த பிரார்த்தனைக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!