சம்பளத்தை குறைத்தும் பட வாய்ப்புகள் வரவில்லை – ரகுல் பிரீத் சிங்

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் ரகுல் பிரீத் சிங், சம்பளத்தை குறைத்தும் பட வாய்ப்புகள் வரவில்லை என தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ரகுல் பிரீத் சிங்குக்கு இப்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. இதுகுறித்து அவர் கூறியதாவது: “நான் படங்களில் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து தவறு செய்து விட்டேன். அந்த தவறு இப்போதுதான் புரிகிறது. தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு பிரச்சினை கொடுத்தது இல்லை. சம்பள விஷயத்தில் கூட விட்டு கொடுத்தேன். யாருடனும் தகராறு செய்தது இல்லை. படப்பிடிப்புக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து விடுவேன்.

இவ்வளவு இறங்கியும் கூட வாய்ப்புகள் வரவில்லை என்றால் அதற்கு காரணம் நான் கவர்ச்சியாக நடித்ததுதான். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்காமல் தொடர்ந்து கவர்ச்சியாகவே நடித்து விட்டேன். அதனால் தான் படங்கள் குறைந்துவிட்டன. இப்போது சைவமாக மாறி விட்டேன்.

திடீரென்று சைவத்துக்கு மாற முடிவு செய்து அதை கடுமையாக கடைபிடித்து வருகிறேன். மும்பையில் படப்பிடிப்பு என்றால் எனது வீட்டில் இருந்து வரும் சைவ உணவை சாப்பிடுகிறேன். பழங்கள் பழச்சாறுகள் சாப்பிடுகிறேன். இந்தியாவில் எங்கு இருந்தாலும் சைவ உணவு கிடைத்து விடும். ஆனால் வெளிநாடுகளில் உடனடியாக சைவ உணவு கிடைப்பது இல்லை. எனது குழுவில் யாருக்கு சைவ உணவு கிடைத்தாலும் அதை எனக்கும் கொடுத்து பசியை தீர்த்து விடுகிறார்கள்.” இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!