ஆதித்ய வர்மா நஷ்டத்தை ஈடுகட்ட வர்மாவை ரிலீஸ் செய்கிறார்களா?

பாலா இயக்கத்தில் த்ருவ் விக்ரம் நடித்த பாலா படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கைவிடப்பட்ட வர்மா
விக்ரம் தன் மகன் த்ருவை ஹீரோவாக்க முடிவு செய்தார். தன் கெரியருக்கு புத்துயிர் அளித்த இயக்குநர் பாலா தான் த்ருவை இயக்க வேண்டும் என்று விரும்பினார். இதனால் ரீமேக்கில் விருப்பம் இல்லாத பாலா விக்ரமுக்காக அர்ஜுன் ரெட்டி படத்தை த்ருவை வைத்து வர்மா என்கிற பெயரில் ரீமேக் செய்தார். முழுப் படத்தையும் எடுத்த பிறகு அது திருப்திகரமாக இல்லை. ரீமேக்கில் பாலா பல மாற்றங்கள் செய்துள்ளார் என்று கூறி தயாரிப்பு தரப்பு அதை கைவிட்டது.

ஆதித்ய வர்மா
பாலா எடுத்த வர்மா படத்தை ஓரம் கட்டி வைத்துவிட்டு கிரிசாயாவை வைத்து ஆதித்ய வர்மா என்கிற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள். படத்தை பார்த்த அனைவரும் கோலிவுட்டுக்கு ஒரு திறமையான நடிகர் கிடைத்துவிட்டார் என்று த்ருவ் விக்ரமின் நடிப்பை பாராட்டினார்கள். ஆனால் ஆதித்ய வர்மா படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அர்ஜுன் ரெட்டி ஹிட் என்றால் அதன் இந்தி ரீமேக்கான கபிர் சிங் சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால் தமிழ் ரீமேக் மட்டும் தோல்வி அடைந்துவிட்டது.

ரிலீஸாகும் வர்மா?
ஆதித்ய வர்மாவால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்ட பாலா இயக்கிய வர்மா படத்தை டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நெட்ஃபிளிக்ஸுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். ஆனால் வர்மாவை ரிலீஸ் செய்வது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா உழைப்பு
ஆதித்ய வர்மா படத்தை பார்த்தவர்கள் த்ருவ் நடிப்பில் பாலாவை கண்டதாக தெரிவித்தார்கள். இந்நிலையில் வர்மா ரிலீஸானால் அதை ஆதித்ய வர்மாவுடன் ஒப்பிடுவார்கள் ரசிகர்கள். தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது போன்று வர்மா மோசமா, இல்லையா என்பதை அனைவரும் ஆராய்ச்சி செய்வார்கள். எது எப்படியோ வர்மா வந்தால் பாலா ரசிகர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள். தன் படத்தை கைவிட்டபோது த்ருவின் கெரியரை மனதில் வைத்து பாலா எதுவும் பிரச்சனை செய்யாமல் அமைதியாக இருந்துவிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!