மாநாடு படத்திற்காக தீவிர பாக்ஸிங் பயிற்சியில் சிம்பு

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் மாநாடு படத்திற்காக சிம்பு தீவிர பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சிம்பு நடிப்பில் கடந்த வருடம் செக்க சிவந்த வானம், காற்றின் மொழி படங்களும், அதைத்தொடர்ந்து வந்தா ராஜாவாதான் வருவேன் படமும் திரைக்கு வந்தன.

இப்படங்களை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கினர். ஆனால் அந்த படம் திடீரென்று கைவிடப்பட்டது.

குறிப்பிட்ட தேதியில் சிம்பு நடிக்க வராமல் தாமதம் செய்ததால் படத்தை நிறுத்தியதாக கூறப்பட்டது. பின்னர் படப்பிடிப்புக்கு உரிய நேரத்தில் வரவேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உறுதிமொழி ஒப்பந்தத்தில் சிம்பு கையெழுத்திட்டால் படப்பிடிப்பை தொடங்க தயார் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறினார்.

அவரது கோரிக்கையை ஏற்று சிம்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதால், மாநாடு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் மாநாடு படத்திற்காக சிம்பு பாக்ஸிங் பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!