4 பேர லவ் பண்றது காமெடியா? கவினை கலாய்த்த கஸ்தூரி

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு வாரங்களாக நடந்த முக்கோணக் காதல் மற்றும் சோக காதல் ஆகியவற்றால் பார்வையாளர்கள் சோர்ந்து போயிருந்த நிலையில் திடீரென கஸ்தூரியின் வரவு சுறுசுறுப்பாக்கி உள்ளது. நேற்றைய முதல் நாளில் கஸ்தூரி போட்டியாளர்களை கலக்கினார். மேலும் அடுத்த வார தலைவரை தேர்வு செய்யும் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது. இதனால் அவருக்கு அந்த வீட்டில் அதிக முக்கியத்துவம் கிடைத்ததாக கருதப்பட்டது.

இந்த நிலையில் அடுத்ததாக ஒவ்வொருவரையும் குறிவைத்து அவர் கேள்விகள் கேட்கும் படலம் தொடங்கியது. கஸ்தூரியிடம் முதலில் சிக்கியவர் கவின். ஒரே நேரத்தில் நான்கு பெண்களை லவ் பண்றது உங்களுக்கு காமெடியா? என கேள்வி எழுப்பிய கஸ்தூரி, உங்களுடைய எதிர்பார்ப்பு ஜேம்ஸ்பாண்ட் லெவலுக்கு இருந்தாலும் கடைசியில் அது வடிவேலு காமெடி போல் முடிந்தது என்று கூற கவினின் முகம் மாறுகிறது. மேலும் இதுவே ஒரு பெண், நான்கு ஆண்களிடம் ஜொள்ளுவிட்டிருந்தால் அதற்கு என்ன பெயர் வைத்திருப்பீர்கள்? என்று கஸ்தூரி கேட்க அதற்கு கவினால் பதில் சொல்ல முடியவில்லை.

கஸ்தூரியின் குற்றச்சாட்டுக்கு கவினுக்கு ஆதரவாக சேரன் பேசினாலும் கஸ்தூரி அதனை கண்டுகொள்ளவில்லை. கவினும் தன்னால் முடிந்தவரை கஸ்தூரியிடம் சமாளித்து பார்த்தும் முடியவில்லை. கவினின் பெயர் ஏற்கனவே பார்வையாளர்கள் மத்தியில் டேமேஜ் ஆகியுள்ள நிலையில் கஸ்தூரியின் அடுக்கடுக்கான கேள்விகள் கவினின் இமேஜை தவிடுபொடி ஆக்கிவருகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.