அற்புத விளக்கும் ஜீனியின் அலப்பறைகளும் – அலாதின் விமர்சனம்

நடிகர் மெனா மசூத்
நடிகை நாமி ஸ்காட்
இயக்குனர் கய் ரிட்சி
இசை ஆலன் மென்கென்
ஓளிப்பதிவு ஆலன் ஸ்டீவார்ட்
நாயகன் மெனா மசூத், அவரது குரங்குடன் சேர்ந்து சிறிய அளவில் திருடி தனது பிழைப்பை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அக்ரபா ராஜ்ஜியத்தின் இளவரசியான நாமி ஸ்காட் மாறுவேடத்தில் ஊருக்குள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாள். அப்போது மெனா மசூத்துடன், நாமி ஸ்காட்டுக்கு பழக்கம் ஏற்படுகிறது.

நாமி ஸ்காட் இளவரசி என்று அறியாமல் அவருடன் பழக ஆரம்பிக்க, இருவரும் புரிதலில் வரும் வேளையில் இளவரசியின் காப்பு காணாமல் போகிறது. இளவரசியின் காப்பை தனது குரங்கு திருடியதை அறிந்து மெனா மசூத் அதனை திரும்ப கொடுப்பதற்காக அரச காவல்களை தாண்டி அரண்மனைக்குள் செல்கிறார்.

இது அந்த நாட்டு சுல்தானின் முக்கிய ஆலோசகரான மர்வான் கென்சாரிக்கு தெரிய வருகிறது. இதையடுத்து மெனா மசூத் மூலம் குகையில் இருக்கும் அற்புத விளக்கை எடுக்க மர்வான் முடிவு செய்கிறார். அவர் மூலமாக நாமி ஸ்காட் இளவரசி என்பதும் தெரியவருகிறது. பின்னர் மர்வானின் ஆலோசனையின் பேரில், அந்த குகைக்கு செல்லும் மெனா மசூத், விளக்கை எடுத்துக் கொண்டு வெளியே வர, அற்புத விளக்கை வாங்கிவிட்டு நாயகனை குகைக்குள் தள்ளிவிடுகிறார் மர்வான்.

இதற்கிடையே மர்வான் வாங்கிய விளக்கை குரங்கு திருடி விடுகிறது. அந்த விளக்கை தேய்க்க விளக்கில் இருந்து வெளியே வரும் வில் சுமித் மெனா மசூத்துக்கு மூன்று வரங்களை அளிக்கிறார்.

இளவரசியை கரம்பிடிக்க நினைக்கும் மெனா மசூத், அதில் ஒரு வரத்தின் மூலம் ராஜாவாகிறார். பின்னர், மெனா மசூத், இளவரசியை பெண் பார்க்க செல்ல அந்த அற்புத விளக்கு மெனா மசூத்திடம் இருப்பது மர்வானுக்கு தெரிய வருகிறது.

கடைசியில், மெனா மசூத் – இளவரசியுடன் சேர்ந்தாரா? மர்வான் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டாரா? ஜீனியான வில் சுமித்துக்கு விடுதலை கிடைத்ததா? என்பதே அலாதின் படத்தின் மீதிக்கதை.


மெனா மசூத், நாமி ஸ்காட் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து மனதில் பதிகின்றனர். வில் சுமித் தனது அலாதியான காமெடி பேச்சால் ரசிக்க வைக்கிறார். மர்வான் கென்சாரி ஆசை கலந்த வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

அலாவுதீன் கதையை தற்போதைய தொழில்நுட்பத்தின் மூலம் வண்ணமயமாக கொடுத்திருக்கிறார் கய் ரிட்சி. படத்தில் வசனங்கள் கூட பாடல்களாகவே நகர்கின்றன. படத்தின் தொடக்கமும், முடிவும் ஒரே புள்ளியில் இருப்பது சிறப்பு. தமிழ் வசனங்கள், பாடல் வரிகள் என அனைத்துமே ரசிக்கும்படியாக உள்ளன.

ஆலன் மென்கெனின் இசையும், ஆலன் ஸ்டீவார்ட்டின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம்.

மொத்தத்தில் `அலாதீன்’ அற்புதம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.